சம்பளம் வாங்காமல் இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ்: ஏ.எல்.விஜய்
சென்னை: ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ ஆகிய படங்களை தொடர்ந்து மு.மாறன் எழுதி இயக்க, ஜே.டி.எஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள படம், ‘பிளாக்மெயில்’. ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜூ அஸ்வினி, பிந்து மாதவி, ஸ்ரீகாந்த் நடித்துள்ளனர். வரும் 12ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் சசி, ஏ.எல்.விஜய், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, ஜி.தனஞ்செயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், ‘படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். மிகவும் வித்தியாசமான ஒரு நல்ல படத்தை மு.மாறன் கொடுத்துள்ளார். இப்படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களை இருக்கையிலேயே கட்டிப்போடும் திரில்லராக படம் இருக்கும். இடைவேளைக்கு முன்பு வரும் 40 நிமிட காட்சிகள், கண்டிப்பாக அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்’ என்றார். ஏ.எல்.விஜய் பேசும்போது, ‘நான் ‘சைவம்’ என்ற படத்தை இயக்கியபோது, ஜி.வி.பிரகாஷ் என்னிடம் சம்பளம் வாங்காமல் இசை அமைத்தார். எனக்கும், அவருக்கும் 20 வருட நட்பு இருக்கிறது. எனது திரைப்பயணத்துக்கு அவர் மிகப்பெரிய உதவியாக இருக்கிறார்’ என்றார்.