கணவரை பிரிந்து குகையில் தஞ்சமடைந்தார்: பிச்சை எடுத்து சாப்பிடும் நடிகை
மும்பை: இந்தியில் கடந்த 27 வருடங்களாக நடித்து வருபவர், நூபுர் அலங்கார். ‘சக்திமான்’, ‘தியா அவுர் பாதி ஹம்’ உள்பட பல டி.வி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அவர், கடந்த 2019ல் நடந்த பிஎம்சி வங்கி மோசடியில் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்தார். பிறகு தாய், சகோதரியை பறிகொடுத்த நிலையில்தான் அவருக்கு வாழ்க்கை மீது அதீத வெறுப்பு ஏற்பட்டது. இதனால், தனது கணவரின் விருப்பம் இல்லாத சம்மதத்துடன், தனது நடிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கையை துறந்து சந்நியாசி ஆனார்.
தற்போது ‘பீதாம்பரா மா’ என்ற ஆன்மிக பெயருடன் இமயமலையில் வசித்து வருகிறார். அங்கு மிகவும் குறைந்த உடைகளுடன் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். பிச்சை எடுத்து சாப்பிட்டு குகைகளிலும், தொலைதூர கிராம பகுதிகளிலும் வசித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உலக வாழ்க்கையின் அழுத்தங்கள், செலவினங்கள் போன்ற கவலைகளின்றி நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்’ என்றார். ஒருகாலத்தில் புகழின் உச்சியில் இருந்து வந்த நடிகை, இன்று அனைத்தையும் துறந்துவிட்டு சந்நியாசியாக வாழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
