சூர்யா படப்பிடிப்பில் நான் தலையிடவில்லை: விஜய் சேதுபதி
சென்னை: பிரபல ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசு இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘பீனிக்ஸ்: வீழான்’. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியதாவது: 2019ல் அனல் அரசு என்னிடம் ஒரு கதை சொன்னார். பிறகு இந்தி ‘ஜவான்’ ஷூட்டிங்கிலும், தமிழ் ‘மகாராஜா’ ஷூட்டிங்கிலும் மறுபடியும் பேசினோம். இப்படித்தான் சூர்யா ஹீரோவாக அறிமுக மானான். அவன் ஹீரோ என்று சொன்னவுடன் எனக்கு அதிக பயம் ஏற்பட்டது. எனினும், அவனது எதிர்காலம் சம்பந்தமான முடிவுகளை அவனே எடுக்க வேண்டும் என்று சுதந்திரமாக விட்டுவிட்டேன்.
ஏற்கனவே ‘சிந்துபாத்’ என்ற படத்தில் நாங்கள் அப்பா, மகனாக நடித்திருந்தோம். நான் நடித்த படங்களை பற்றி என் வீட்டில் பேசுவேன். எனவே, இப்படத்தின் பூஜையில் இருந்து ஒரு விஷயத்தில் கூட நான் தலையிடவில்லை. சூர்யாவிடம், ‘இந்த நடிப்பு வாழ்க்கையை சந்தோஷமாக நினைக்கிறாயா?’ என்று நான் கேட்டேன். ‘ஆமாம்’ என்றான். நடிப்பு அவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சினிமாவில் இன்னும் பல உயரங்களை அடைவான். மகனை முதல் முறையாக பள்ளியில் சேர்த் தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. என் முதல் படத்தில் ஏற்பட்ட படபடப்பு மாதிரி இருக்கிறது என்றாலும், ரொம்ப சந்தோஷமாகவே இருக்கிறேன். என்னைவிடவும் என் மனைவி ரொம்ப சந்தோஷப் படுகிறார்.