ஃபாலோயர்கள் குறைந்ததால் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை; டாப்ஸி அதிர்ச்சி பதிவு
மும்ைப: ஃபாலோயர்கள் குறைந்ததால் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நடிகை டாப்ஸி கவலையுடன் பதிவை வெளியிட்டிருக்கிறார். மிஷா அகர்வால் என்ற இளம்பெண், இன்ஸ்டா பிரபலமாக இருந்தார். திடீரென நேற்று அவர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது சகோதரி கூறியது: மிஷாவுடைய வாழ்க்கையின் ஒரே நோக்கம் இன்ஸ்டாவில் சாதனைகள் படைப்பதே. இறக்கும் போது சுமார் 3.5 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த மிஷா, 1 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்ட வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்டிருந்தார். என் தங்கை இன்ஸ்டாகிராம் மற்றும் அவரது பின்தொடர்பவர்களைச் சுற்றி தனது உலகத்தை உருவாக்கினார். திடீரென அவளது பின்தொடர்பவர்கள் குறையத் தொடங்கியபோது, அவர் கலக்கமடைந்து பயனற்றவளாக உணர்ந்தாள்.
ஏப்ரல் மாதத்திலிருந்து மிஷா மனச்சோர்வடைந்திருப்பதாகவும், அடிக்கடி அழுவதாகவும் அம்மா தெரிவித்தார். ‘‘ஜிஜ்ஜா, என் பின்தொடர்பவர்கள் குறைந்துவிட்டால் நான் என்ன செய்வேன்? என் வாழ்க்கை முடிந்துவிடும்’’ எனக் கூறி என்னிடமும் அழுதாள் என்றார். இது குறித்து டாப்ஸி வெளியிட்ட பதிவில், ‘‘இன்றைய இளம் தலைமுறையை நினைத்து எதற்கு நான் பயந்தேனோ அது நடந்துவிட்டது. சோஷியல் மீடியாதான் வாழ்க்கை என இவர்கள் வாழ்கிறார்கள். அது கண்டிப்பாக மன அழுத்தத்தில்தான் போய்விடும். இளைஞர்களே தயவு செய்து அதிலிருந்து விடுபட்டு வாருங்கள். உங்களுக்கான உலகம் வேறு மாதிரியானது. அது உங்களுக்காக காத்திருக்கிறது. தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்’’ என கூறியுள்ளார்.