திருமணம் தள்ளி வைக்கப்பட்டது ஏன்? ரித்விகா விளக்கம்
சென்னை: பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் அறிமுகமான ரித்விகா, தொடர்ந்து ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்பட பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிறகு சில நடிகைகளுக்கு டப்பிங் பேசினார். கடந்த மாதம் தனக்கும், வினோத் லட்சுமணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்தார். வினோத் திருச்சியை சேர்ந்தவர் என்றும், இது தனது பெற்றோர் பார்த்து உறுதி செய்த திருமணம் என்றும் அவர் அறிவித்தார். மேலும், திருமண நிச்சயதார்த்த போட்டோக்களையும் வெளியிட்டார். இருவரும் தங்கள் பெயர்களின் முதல் எழுத்து பொறிக்கப்பட்ட மோதிரங்களை மாற்றிக்கொண்ட போட்டோக்கள் வைரலானது. இந்நிலையில், திடீரென்று தனது திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக ரித்விகா தெரிவித்துள்ளார். தனது திருமண அழைப்பிதழை வழங்கிய அனைவருக்கும் அவர் தெரிவித்துள்ள செய்தியில், ‘குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக வரும் 27ம் தேதி நடைபெற இருந்த எனது திருமணம் தள்ளிவைக்கப்படுகிறது, உங்களுடைய புரிதலுக்கு நன்றி’ என்பதாக கூறியுள்ளார்.