சரவண பவன் ராஜகோபால் ஜீவஜோதி கதையில் மோகன்லால்
சென்னை: சரவண பவன் ஓட்டல் நிறுவனர் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய் பீம்’, ‘வேட்டையன்’ ஆகிய படங்களை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். கடந்த 2001ம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தி கொலை செய்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம். தண்டனையை குறைக்க ராஜகோபால் மனுதாக்கல் செய்தபோது அவருக்கு ஆயுள் தண்டனை தந்து தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். சிறை செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு ராஜகோபால் உயிரிழந்தார்.
இந்த வழக்கு நடைபெற்றபோது பத்திரிகையாளராக இருந்த இயக்குநர் ஞானவேல், இந்த வழக்கை மையமாக வைத்து ‘தோசா கிங்’ என்ற பெயரில் திரைப்படத்தை இயக்க நீண்ட காலமாக முயற்சி செய்து வந்தார். தற்போது அந்த முயற்சிக்கு பலனளிக்கும் விதமாக படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ராஜகோபால் வேடத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லாலிடம் படத்தின் கதையை ஞானவேல் கூறியிருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது