மிஸ்டர் எக்ஸ் 1965 இமயமலை சம்பவம்: எஸ்.லஷ்மன் குமார் தகவல்
சென்னை: ‘லப்பர் பந்து’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மன் குமார், ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள பிரமாண்டமான படம், ‘மிஸ்டர் எக்ஸ்’. இதை ‘எஃப்ஐஆர்’ என்ற வெற்றிப் படத்தை தொடர்ந்து மனு ஆனந்த் எழுதி இயக்கியுள்ளார். ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட் நடித்துள்ளனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது எஸ்.லஷ்மன் குமார் பேசுகையில், ‘1965ல் இந்திய உளவுத்துறை அமைப்பு சீனாவை சமாளிக்க, இமயமலையிலுள்ள நந்தாதேவி மலைக்கு 7 புளுட்டோனியம் கேப்ஸ்யூல்ஸ் கொண்டு செல்கின்றனர். அங்கு தொலைந்த அவை,இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கின்றன. நினைத்துப் பார்க்க முடியாத ஆபத்து நிறைந்த விஷயமான இது, 1977ல் அமெரிக்காவில் வெளியான ஒரு பத்திரிகைச் செய்தியால் வெளியே தெரிந்தது. இப்படத்தின் ஆரம்பப்புள்ளியே இதுதான். அப்படியொரு நியூக்ளியர் கேப்ஸ்யூல் காணாமல் போனதன் பின்னணி மற்றும் அதன் விளைவுகளை சிறிது கற்பனை கலந்து படமாக்கியுள்ளோம்’ என்றார்.