கடலோர காதல் கதையில் மிர்னா
கடலோரம் நடக்கும் காதல் கதைக்கு ’18 மைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன், மிர்னா நடிக்கின்றனர். சித்து குமார் இசை அமைக்க, விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதுகிறார். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். படம் குறித்து சதீஷ் செல்வகுமார் கூறுகையில், ‘காதல் உலக மொழி என்று சொல்லப்பட்டாலும், அதன் எல்லைகளும், சர்வதேச நீர்நிலைகளும் காதலுக்கு இன்னும் ஒரு பெரிய தடையாகவே இருக்கிறது.
இதை மையப்படுத்தி சர்வதேச சம்பவம் ஒன்றை காட்சிப்படுத்துகிறேன். கடலை போலவே காதல் அழகானது. ஆனால், அதன் ஆழத்தை போல் ஆபத்தானதும் கூட. நிலம்தான் இங்கு அரசியல் செய்கிறது. உலக காதலர்கள் அனைவரும் இக்கதையுடன் தங்களை இணைத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.