தனுஷ் பட விவகாரத்தில் இயக்குனர் எதிர்ப்பு தயாரிப்பாளர் பதில்
சென்னை: ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் உருவான அம்பிகாபதி திரைப்படத்தினை அப்சுவிங் என்டர்டெயின்மென்ட் (UPSWING ENTERTAINMENT) நிறுவனம், புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன், ஏஐ மூலம் சில பகுதிகளை மாற்றி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியிடவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் இயக்குனர் ஆனந்த் எல். ராய், அம்பிகாபதி திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “கடந்த கால படைப்புகளை மாற்றக் கூடாது.
அவை அப்படியே இருக்க வேண்டும்” ஏஐ மூலமாக ஒரு கடந்த கால படைப்பின் முடிவை மாற்றுவது என்பது, அப்படைப்பின் உண்மையான ஆன்மாவைச் சிதைப்பதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஏராஸ் மீடியா வேர்ல்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் திவேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னோடியான தொழில்நுட்பமான ஜெனரேட்டிவ் AI கருவிகள் மூலம், படத்தின் சில அம்சங்களைப் புதுப்பித்து, புதிய பார்வையாளர்களைச் சென்றடையும் வகையில், ஒரே நேரத்தில் அந்த படத்தின் கலையுணர்வையும் பாதுகாக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இது புதிய பதிப்பாக தனியாகவும், தெளிவாகவும் குறியிடப்பட்டுள்ளது இது அடிப்படை படைப்பின் மாற்றமல்ல, ஒட்டுமொத்தத்தை மாற்றுவதுமல்ல. இது ஒரு கலையின் புதிய வடிவம்.