வரும் பிப்ரவரி மாதம் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா காதல் திருமணம்: நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா, முன்னணி நடிகராக விஜய் தேவரகொண்டா புகழ்பெற்றுள்ளனர். தற்போது ராஷ்மிகா மந்தனா இந்தியிலும் நடிப்பதால், அவரை ‘நேஷனல் கிரஷ்’ என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி வந்தது. அதை இருவரும் மறுக்கவில்லை. ஆனால், தங்கள் காதலை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்தனர். சில வருடங்களாக அவர்கள் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அடிக்கடி ஓட்டலுக்கு செல்வது, திரைப்பட விழாக்களுக்கு காரில் ஜோடியாக சென்று பங்கேற்பது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்று பொழுதுபோக்கி வந்தனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தங்கள் சோஷியல் மீடியாவில் வெளியிட்டாலும், தங்கள் காதலை அவர்கள் உறுதி செய்யவில்லை.
இந்நிலையில், அவர்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஐதராபாத்தில் இருக்கும் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இந்நிகழ்ச்சி நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா காதல் திருமணம் நடக்க இருப்பதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக மலர்ந்தது. அதை தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.
அப்போது முதல் அவர்களது காதல் வலுப்பெற்று வந்தது. இந்நிலையில், இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்கு முன்பு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகா மந்தனாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ரத்து செய்யப்பட்டது.