ரகசியமாக படம் பார்த்த அனுபமா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக ‘பைசன்’, கவுசிக் பெகல்லபதி இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமான ‘கிஷ்கிந்தாபுரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘கிஷ்கிந்தாபுரி’ வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
அதில், முதன்முறையாக அனுபமாவை பேய் உருவத்தில் காட்டி இருந்தது பலரை ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், ஹாரர் படம் அனுபவம் குறித்து பேசிய அனுபமா பரமேஸ்வரன், ”எனக்கு ஹாரர் படங்கள் மிகவும் பிடிக்கும். நான் சின்ன வயதில் இருக்கும்போது பெற்றோருக்கு தெரியாமல் ரகசியமாக பேய் படங்களைப் பார்ப்பேன். வீட்டில் அனைவரும் தூங்கச் சென்ற பிறகு, அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருட்டில் பேய் படங்கள் பார்ப்பேன். அப்போதுதான் அந்த படத்தை பார்க்க ஒரு கிக் இருக்கும்’’ என்றார்.