தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

சிம்புவால் மீண்டும் நடந்த படப்பிடிப்பு

‘முதல் நீ முடிவும் நீ’, ‘சிங்க்’, ‘தருணம்’ ஆகிய படங்களில் நடித்துள்ள கிஷன் தாஸ், ‘டிராகன்’ ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர், விடிவி கணேஷ், மேகா ஆகாஷ், சந்தானபாரதி நடித்துள்ள படம், ‘ஆரோமலே’. மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ளார். சாரங் தியாகு இயக்க, சித்து குமார் இசை அமைத்துள்ளார். வரும் 7ம் தேதி திரைக்கு வரும் இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

படம் குறித்து சாரங் தியாகு கூறுகையில், ‘கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனரான நான் இயக்கியுள்ள முதல் படமான ‘ஆரோமலே’ படம் காதல் கதையுடன் உருவாகியுள்ளது. இக்கதையை கிஷன் தாஸை மனதில் நினைத்து எழுதினேன். பள்ளி மாணவன் இளைஞனாவது வரை கதை நடக்கிறது. சினிமா வசனங்களை பேசி கிஷன் தாஸ் காதலிப்பார். ஷிவாத்மிகா நன்கு சம்பாதித்து, பொறுப்பாக இருப்பவரை காதலிக்க நினைப்பார். அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தால் எப்படி இருக்கும் என்பது திரைக்கதை.

படத்தை பார்த்த பின்பு, காதல் என்றால் என்ன என்ற புரிதல் அனைவருக்கும் ஏற்படும். படத்தை பார்த்த சிம்பு, சில மாற்றங்களை சொன்னார். முன்பே படப்பிடிப்பு முடிந்தாலும், அவர் சொன்ன மாற்றங்களை மீண்டும் படமாக்கினோம். அதை பார்த்துவிட்டு எங்களை பாராட்டினார். அவரது தந்தை டி.ராஜேந்தர், தாயார் உஷா ஆகியோரையும் படத்தை பார்க்க வைத்தார். அவர்களும் எங்களை பாராட்டினர். படப்பிடிப்பு நடந்தபோது கிஷன் தாசுக்கு திருமணம் நடந்தது. ஆனால், அவர் தனது ஹனிமூன் பயணத்தை மாற்றிக்கொண்டு நடித்து முடித்தார்’ என்றார்.