சாப்ட்வேர் இன்ஜினியரை கடத்தி சரமாரி தாக்குதல்: லட்சுமி மேனனுக்கு போலீஸ் வலை பரபரப்பு தகவல்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவாவை சேர்ந்தவர் அலியார் ஷா சலீம் (28). கொச்சியில் உள்ள ஒரு ஐடி பார்க்கில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பானர்ஜி ரோட்டில் உள்ள ஒரு மது பாருக்கு தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அப்போது பாரில் இருந்த ஒரு கும்பலுடன் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு அலியார் ஷா சலீம், தனது காரில் புறப்பட்டு சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த அந்த கும்பல், அலியார் ஷாவின் காரை வழிமறித்தது.
பின்னர் அவரை காரில் இருந்து இறக்கி அந்த கும்பல் தங்களுடைய காரில் கடத்தி சென்று சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது. இது குறித்து அலியார் ஷா சலீம் கொச்சி வடக்கு போலீசில் புகார் செய்தார். எர்ணாகுளத்தை சேர்ந்த ரஞ்சித், அனீஷ், சோனா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே தன்னை தாக்கிய கும்பலில் பிரபல நடிகை லட்சுமி மேனனும் இருந்ததாக அலியார் ஷா தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன்: சாப்ட்வேர் இன்ஜினியரை கடத்தி தாக்கிய வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஓணம் பண்டிகை முடிந்த பிறகு விசாரிக்கப்படும் என்றும், அதுவரை லட்சுமி மேனனை கைது செய்யக்கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.