இந்திய அளவில் புகழ்பெற்ற மாடலாகவும், பல்வேறு அழகுப் போட்டிகளில் வென்று பட்டம் பெற்றவருமான மீனாட்சி சவுத்ரி, தமிழில் ‘கொலை’ என்ற படத்தில் அறிமுகமாகிறார். விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிக்கும் இப்படத்தை ‘விடியும் முன்’ பாலாஜி கே.குமார் இயக்கியுள்ளார். வரும் 21ம் தேதி படம் திரைக்கு வருகிறது. தற்போது தமிழில் பேச பயிற்சி பெற்று வரும் மீனாட்சி சவுத்ரி, ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி, சரோஜாதேவி நடித்த ‘புதிய பறவை’ படத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் எழுதி பி.சுசீலா பாடிய ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடல் காட்சியைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன்.
தற்போது அந்தப் பாடலின் ரீமிக்ஸில், ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு ஏற்ப நான் நடித்துள்ளேன். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். ‘கொலை’ படத்துக்குப் பிறகு நான் நடிக்கும் படம், தெலுங்கில் உருவாகும் ‘குண்டூர் காரம்’. இதில் மகேஷ் பாபு நடிக்கிறார். தமிழில் நயன்தாரா, திரிஷா ஆகிய நடிகைகளை மிகவும் பிடிக்கும். அவர்களைப்போல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிப்பேன்’ என்றார்.