கடந்த 1994ல் உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென், தமிழில் ‘ரட்சகன்’ என்ற படத்தில் நாகார்ஜூன் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் நடித்து முன்னணி நடிகையானார். 47 வயது நிரம்பிய அவர், இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். இதனால், படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு வெப்தொடர்களில் நடிக்கிறார். தற்போது ‘தாலி’ என்ற வெப்தொடரில் திருநங்கை கேரக்டரில் நடித்துள்ள சுஷ்மிதா சென், தனது சமூக வலைத்தளத்தில் டீசரை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், கண்ணாடி முன்னால் நின்று தனது சேலையைச் சரிசெய்து, தன்னை கவுரி சாவந்த் என்று அறிமுகப்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது. மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வருபவருமான கவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்தொடரை ரவி ஜாதவ் இயக்கியுள்ளார்.