கடந்த 1990களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், ‘தடை அதை உடை’. காந்திமதி பிக்சர்ஸ் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ளார். ‘அங்காடித்தெரு’ மகேஷ், ‘திருக்குறள்’ குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது, நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம் கவுதமி, சுபா, சூரியபிரதாபன் நடித்துள்ளனர். தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். அறிவழகன் பாடல்கள் எழுத, சாய் சுந்தர் இசை அமைத்துள்ளார்.
டாய்சி எடிட்டிங் செய்ய, அசோக் குமார் சண்டை பயிற்சி அளித்துள்ளார். சிவகுமார், மணி இணைந்து அரங்குகள் அமைத்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி பட்டுக்கோட்டை அறிவழகன் முருகேசன் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், ‘1990களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவில் 50 வருடங்களாக கொத்தடிமையாக இருந்த ஒருவன் தனியாக போராடி, தன் வம்சத்தை கல்விக்கு திருப்பிய உண்மை சம்பவத்தையும் மற்றும் சமகாலத்தில் சோஷியல் மீடியா கல்வி மற்றும் அரசியலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்யும் மாற்றங்கள் மக்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் சுவாரஸ்யமாக சொல்லும் படமாக உருவாகியுள்ளது.
சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் 31ம் தேதி திரைக்கு வருகிறது. நான் ஜெர்மனியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறேன். எந்த இயக்குனரிடமும் பணியாற்றவில்லை. ‘ஊழ்வினை’ என்ற குறும்படத்தை இயக்கிய அனுபவத்தை வைத்து இப்படத்தை எழுதி இயக்கியுள்ளேன்’ என்றார்.