Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மீண்டும் அஜித்தை இயக்குவது மகிழ்ச்சி: ஆதிக் ரவிச்சந்திரன்

சென்னை: அஜித் குமார் நடிக்க, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற இப்படம், அஜித் குமாரின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார் ரேஸில் தீவிரமாக பங்கேற்று வரும் அஜித் குமார், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், யாரும் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘பிளாக்மெயில்’ என்ற படம் சம்பந்தமான விழாவுக்கு வந்திருந்த ஆதிக் ரவிச்சந்திரனிடம், அஜித் குமாரின் அடுத்த படம் குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த ஆதிக் ரவிச்சந்திரன், ‘மீண்டும் அஜித் சார் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளதை நினைத்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். ‘குட் பேட் அக்லி’ மாதிரியே அடுத்த படத்தையும் இயக்க முடியாது.

வித்தியாசமாக உருவாக்க வேண்டும். இதுகுறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வரும். ‘குட் பேட் அக்லி’ படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படம் என்று பலர் சொல்கின்றனர். அதைக்கேட்டு நிஜமாகவே எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதுபோல் வேறு சில படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நல்ல கதையம்சம் கொண்டுள்ள நிறைய படங்கள் அமோக வெற்றிபெற்றுள்ளன. மறுபுறம், கமர்ஷியல் கதை கொண்டுள்ள படங்களும் நல்ல வரவேற்பை பெறுவதில் அதிக மகிழ்ச்சி’ என்று சொன்னார்.