Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹீரோயினை பார்த்துதான் படம் இயக்குவேன்: பாம் பட விழாவில் பார்த்திபன் கல கல

சென்னை: ஜெம்பிரியோ பிக்சர்ஸ் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள படம், ‘பாம்’. இதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், சிங்கம்புலி, அபிராமி, ரமேஷ் திலக், பாலசரவணன் நடித்துள்ளனர். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசை அமைத்துள்ளார். மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட் இணைந்து எழுதிய திரைக்கதைக்கு பி.எம்.மகிழ்நன் வசனம் எழுதியுள்ளார். வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது.

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் பேசும்போது, ‘‘இந்த மாதிரி கதையையும், டைட்டிலையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், இயக்குனர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும். இதை தயாரிக்க வேண்டும் என்றால், தயாரிப்பாளர் அதைவிட எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்க வேண்டும். ஆங்கில படங்களில்தான் இதுபோல் பார்த்திருப்போம். அதை தமிழ் சினிமாவில் காட்டுவது சவாலான விஷயம். நான் எப்போதும் ஹீரோயினை பார்த்துதான் படம் இயக்க ஆசைப்படுவேன். அர்ஜூன் தாஸை பார்த்தால், ஹீரோவை மையமாக வைத்து படம் இயக்க தோன்றுகிறது. ஷிவாத்மிகாவை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறேன், அவர் நல்ல நடிகை’’ என்றார்.