Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹீரோயின்களுக்கு நான் சிபாரிசு செய்வதில்லை: ஜெயம் ரவி

சென்னை: ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி நடித்துள்ள படம், ‘இறைவன்’. இதை அஹமது எழுதி இயக்கியுள்ளார். வரும் 28ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து ஜெயம் ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஏற்கனவே நான் சில படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன். இதிலும் போலீஸ் அதிகாரி என்றாலும், முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. ஒரு காட்சியில் கூட போலீஸ் சீருடை அணிந்து நடிக்கவில்லை. நயன்தாராவுக்கும், எனக்குமான காட்சிகள் மற்றும் கதை குறித்து எதுவும் சொல்ல முடியாது. நயன்தாராவுக்கும் இது வித்தியாசமான படம்தான். வழக்கமான காதல், வழக்கமான பழிவாங்கல் எதுவும் இப்படத்தில் கிடையாது.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், அதன் இன்னொரு பகுதியாக காதல் மற்றும் குடும்ப சென்டிமென்ட் இருக்கிறது. மகிழ்ச்சி, துன்பம் என்று எது வந்தாலும் முதலில் இறைவனையே நாடுகிறோம். ஆனால், எல்லா விஷயத்தையும் இறைவன்தான் சரி செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடாது. அப்படியொரு விஷயத்தைப் பற்றி இப்படம் பேசுகிறது. தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருப்பது சரியான முடிவு. சில காட்சிகளை நீக்கினால் ‘யு/ஏ’ தருவதாக சொன்னார்கள். ஆனால், டிரைலரில் காட்டிய எல்லாக் காட்சிகளும் படத்தில் இருக்க வேண்டும். ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காகவே ‘ஏ’ சான்றிதழை ஏற்றுக்கொண்டோம்.

எனது படங்களில் நடிக்கும் நடிகைகளை தீர்மானம் செய்வது தயாரிப்பாளரும், இயக்குனரும்தான். யாரையும் நான் சிபாரிசு செய்வதில்லை. நான் எனது பணியை மட்டும் சரியாகச் செய்வேன். சினிமா தவிர மற்ற விஷயங்களில் நான் தலையிடுவதில்லை என்று சிலர் சொல்கின்றனர். நானும் சமூக சேவைகள் பலவற்றை சத்தமின்றி செய்து வருகிறேன். அதை வெளியில் சொல்லி விளம்பரப்படுத்த விரும்பவில்லை.