சென்னை: விஜேவாக இருந்து நடிகையானவர் தீபிகா. சின்னத்திரையிலும் படங்களிலும் நடித்துள்ளார். பேட்டியொன்றில், ஒரு சிறுவன் நடந்து கொண்ட அதிர்ச்சிகரமான செயல் பற்றி பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், தீபிகா கூறியது: இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு ஐடியில் இருந்து தொடர்ந்து ஆபாசமான செய்திகள் வந்துக்கொண்டே இருந்தது. நான் உனக்கு ரூம் போட்டுத்தருவேன். நான் சொல்வதெல்லாம் செய்வாயா? என்று அநாகரிகமாக மெசேஜ் வந்தது. உடனே அந்த ஐடி பற்றி விவரம் எடுத்தபோது, அந்த ஐடி வைத்திருப்பது 9 அல்லது 10ம் வகுப்பு படிக்கும் பையன் என்ற உண்மை தெரியவந்தது. அவ்வளவு சின்ன பையன் இப்படி பேசுவதை பார்த்து அதிர்ச்சியானேன்.
ஒரு சின்னப்பையனுக்கு செல்போன் இருக்கிறது, அவன் இந்தளவிற்கு சோசியல் மீடியாவில் ஆபாசமாக செய்தி அனுப்புகிறான் என்பது அவனது பெற்றோருக்கு தெரியுமா? இல்லையா? அவர்கள் இதையெல்லாம் கவனிக்காத அளவிற்கு இருக்கிறார்களா? என்று யோசிக்கும்போது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. உடனே அந்த பையனுடைய செய்திகள், அவனைப் பின்பற்றுபவர்களின் விவரம் எல்லாத்தையும் ஸ்கீரின்ஷாட் எடுத்தேன். பின் அவனிடம், ‘தம்பி நான் உன்னோட விவரங்களை எல்லாத்தையும் சோசியல் மீடியாவில் போஸ்ட் போடவா?’ என்று கேட்டதற்கு உடனே அந்த பையன் பயந்துபோனான். ‘ஐயோ அப்படி பண்ணிடாதீங்க, இது என் ஃபிரண்ட்டோட ஐடி, அவன் கொன்னே போட்டுருவான்’ என்று பதறிவிட்டு பின், என்னை அன்ஃபாலோ பண்ணிவிட்டு அந்த ஐடியையும் டெலீட் பண்ணி இருக்கான். இப்படி சின்ன பையனுக்கு எப்படி தைரியம் வருது? பெற்றோர்கள் கவனிக்கவில்லையா? இதை நினைத்தால் கஷ்டமாக இருக்கு என்று தீபிகா தெரிவித்துள்ளார்.
