ஒன்றிய அரசு வழங்கிய ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் மனம் திறந்து பேசினார். ‘48 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவை பற்றி எதுவும் தெரியாத காலத்தில் நானும், நண்பர்கள் சிலரும் படம் தயாரிக்க கனவு கண்டோம். நான் தைரியமாக மெட்ராஸுக்கு சென்றேன். எனக்கே தெரியாமல் என் போட்டோவை இயக்குனர் பாசிலுக்கு அனுப்பிவிட்டார்கள்.
இப்படித்தான் ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படத்தில் அறிமுகமானேன். ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பில் கேமரா முன்னால் நிற்கும்போது, அந்த நினைவுகள் கண்முன் வந்து செல்கிறது. நான் மரத்தில் இருந்து விழுந்த சின்ன இலை. காற்றில் அங்கும், இங்கும் ஆடிக்கொண்டிருந்த என்னை திரையுலகினர் சரியான இடத்தை நோக்கி பயணப்பட வைத்தார்கள். எப்போது என்மீது எனக்கே சந்தேகம் வந்து தடுமாறுகிறேனோ, அப்போது ‘லாலேட்டா’ என்ற அன்பான குரல்கள் என்னை ஊக்கப்படுத்தி முன்னழைத்து செல்கின்றன.
ஒரு நடிகன், இயக்குனர்கள் உள்பட பல்வேறு தரப்பினரால் வடிவமைக்கப்படும் களிமண்ணை போன்றவன். என் வாழ்க்கையில் வெற்றியையும், கடுமையான விமர்சனத்தையும் எதிர்கொண்டிருக்கிறேன். இரண்டையும் சமமாக பார்க்க கற்றுக்கொண்டேன். ரசிகர்கள் இல்லாமல் சாதித்திருக்க முடியாது. எனக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் முழுக்க, முழுக்க அவர்களுக்கே சொந்தம்’ என்றார்.