மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஹரி ஹர வீரமல்லு’ என்ற படம் தோல்வி அடைந்துவிட்ட நிலையில், மீண்டும் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓஜி’ என்ற படத்தில் பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். வரும் 25ம் தேதி படம் திரைக்கு வருகிறது. தற்போது புரமோஷன் பணி நடந்து வருகிறது. படம் குறித்து பேசிய பிரியங்கா அருள் மோகன், ‘இந்த படத்துடன் எனது பயணம் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் நடந்துள்ளது. எனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு பயணத்தை எந்த நிலையிலும் மறக்க மாட்டேன். பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.
இதுவரை நான் நடித்த கேரக்டர்களில், இந்த கண்மணி எனக்கு மிகவும் பிடித்த கேரக்டராகும். இந்த வேடத்துக்கு எப்போதுமே என் இதயத்தில் சிறந்த இடம் இருக்கும். படப்பிடிப்பு நடந்தபோது, பவன் கல்யாணிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அவர் ஒரு ஜென்டில்மேன். அனைவரையும் சமமாக நடத்துவார். திரையிலும், வெளியிலும் அவர் ஒரு உண்மையான ஹீரோ’ என்று ஏகத்துக்கும் ஐஸ் வைத்தார்.