Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாட்டிறைச்சி சாப்பிட்ட விவகாரம்: ரன்பீர் கபூர் பற்றி பாடகி சின்மயி பரபரப்பு கருத்து

சென்னை: மிகப் பிரமாண்டமான முறையில் 2 பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ என்ற பான் இநதியா படத்தில் ராமர் கேரக்டரில் ரன்பீர் கபூர், சீதை வேடத்தில் சாய் பல்லவி, ராவணன் கதாபாத்திரத்தில் யஷ் நடித்து வருகின்றனர். நிதேஷ் திவாரி இயக்குகிறார். இதன் முதல் பாகம் வரும் 2026 தீபாவளியன்றும், 2ம் பாகம் வரும் 2027 தீபாவளியன்றும் திரைக்கு வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற ஹான்ஸ் சிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இசை அமைக்கின்றனர். ‘டியூன்’, ‘கேப்டன் அமெரிக்கா’ போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ‘ராமாயணா’ படத்தில் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2021ல் ரன்பீர் கபூர் அளித்த பேட்டியில், ‘‘எனது குடும்பத்தினர் பெஷாவரை சேர்ந்தவர்கள். அந்த நகரத்தின் ஏராளமான உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மட்டன் பாயா மற்றும் மாட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுவேன்’’ என்று பேசியிருந்தார். இதனால் மாட்டிறைச்சி சாப்பிடும் ஒருவர் எப்படி ‘ராமாயணா’ படத்தில் ராமர் வேடத்தில் நடிக்கலாம் என்று, ரன்பீர் கபூர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாடகி சின்மயி கூறுகையில், ‘‘கடவுளின் பெயரை பயன்படுத்தி சாமியார் ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறார். அதற்கு பிறகு அவர் ஜெயிலுக்கு சென்று திரும்பி வந்து, தேர்தலில் நின்று வாக்குகளையும் பெறுகிறார். இப்படிப்பட்ட சூழலில், சிலரது விருப்ப உணவுகள் எப்படி பெரிய பிரச்னையாகும்?’’ என்று, ரன்பீர் கபூருக்கு ஆதரவாக பேசியுள்ளார். சின்மயி கருத்தை ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாவில் வரவேற்று வருகின்றனர்.