புதுடெல்லி: லவ குஷ் ராமலீலா கமிட்டி, வரவிருக்கும் ராமலீலா நிகழ்ச்சியில் மண்டோதரியாக நடிகை பூனம் பாண்டேவை நடிக்க வைக்க முடிவு செய்தது, பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாலிவுட்டில் ஆபாச நடிகையாக வலம் வருபவர், பூனம் பாண்டே. கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘நஷா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து கன்னடம், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
விளம்பரங்களில் நடித்து அதிக சம்பளம் வாங்குகிறார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பையின்போது, ‘இந்தியா உலக கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன்’ என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். தனது ேசாஷியல் மீடியாவில் கிளாமர் போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில். செங்கோட்டை மைதானத்தில், லவ குஷ் ராமலீலா குழு சார்பில் ஆண்டுதோறும் ராமலீலா நாடகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், ஆபாச நடிகையாக கருதப்படும் பூனம் பாண்டேவின் சர்ச்சைக்குரிய கடந்த காலத்தை சுட்டிக்காட்டி, இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது பக்தர்களின் மனதை புண்படுத்தும் என்று சொல்லி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராமலீலா குழுவுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நிர்வாகி சுரேந்திர குப்தா எழுதியுள்ள கடிதத்தில், ‘ராமலீலா என்பது வெறும் நாடகம் அல்ல. அது இந்திய பாரம்பரியத்தின் அடையாளம். மண்டோதரி கதாபாத்திரம் நல்லொழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் சிறந்த மனைவிக்கான இலக்கணமாக கருதப்படுகிறது. எனவே, ஒரு நடிகையின் பொதுவாழ்க்கை அந்த கதாபாத்திரத்தின் மாண்புடன் பொருந்தியிருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளதையொட்டி, இந்த நாடகத்தில் இருந்து பூனம் பாண்டே நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது