ஐதராபாத்: பிரபாஸ், ராணா டகுபதி, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் நடித்துள்ள படம், ‘பாகுபலி’. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிக வசூல் செய்தது. தற்போது 2 பாகங்களையும் இணைத்து ஒரே படமாக ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். இதில் தமன்னாவின் காதல் காட்சிகள் உள்பட பல்வேறு காட்சிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறுகையில், ‘படத்தின் 2 பாகங்களையும் இணைத்து டைட்டில்களை நீக்கிய பின்பு, இப்படம் 5 மணி, 27 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவுக்கு இருந்தது. பிறகு அதையும் சுருக்கி 3 மணி, 43 நிமிடங்களாக மாற்றினோம். பிரபாஸ், தமன்னாவின் காதல் மற்றும் அவர்களுக்கான பாடல் காட்சிகள் உள்பட பல பகுதிகளை நீக்கினோம். ‘பாகுபலி’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் உணர்ச்சி ரீதியாகவும், கதை ரீதியாகவும் முக்கியமானது.
ஆனால், புதிய பதிப்பு முற்றிலும் கதை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். முதலில் எடிட்டிங் செய்தபோது 4 மணி, 10 நிமிடங்கள் இருந்தது. சினிமா மற்றும் மற்ற துறையிலுள்ள பார்வையாளர்களுக்கு சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்தோம். அவர்கள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் அதை 3 மணி, 43 நிமிடங்களாக குறைத்தோம்’ என்றார். ஆனால், தற்போது வெளியாகியுள்ள படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
