Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

7 வருடத்துக்கு பிறகு தெலுங்கில் திரிஷா

சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருகிறார். அவர் தமிழில் முதலில் நடித்த படம், ‘ஜோடி’. பிரவீன்காந்த் இயக்கிய இப்படத்தில், சிம்ரன் தோழியாக ஓரிரு காட்சியில் மட்டும் திரிஷா தோன்றினார். கடந்த 1999 செப்டம்பர் 9ம் தேதி வெளியான இப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இதையடுத்து 2002 டிசம்பர் 13ம் தேதி அமீர் இயக்கத்தில் திரைக்கு வந்த ‘மௌனம் பேசியதே’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா, நேற்று முன்தினம் திரையுலகில் தனது 21 ஆண்டுகள் நிறைவடைந்த தினத்தை கொண்டாடி மகிழ்ந்தார். மேலும், இதுநாள்வரை தனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

தற்போது மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித் குமாருடன் நடிக்கும் திரிஷா, இதன் ஷூட்டிங்கிற்காக அசர்பைஜான் நாட்டுக்கு சென்றுள்ளார். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்த திரிஷா, தற்போது 7 வருட இடைவெளிக்குப் பிறகு 2 தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ‘விஷ்வம்பரா’ என்ற படத்தில் நடிக்கும் அவர், அடுத்து நாகர்ஜூனா நடிக்கும் 100வது படமான ‘லவ் ஆக்‌ஷன் ரொமான்ஸ்’ என்ற படத்திலும் நடிக்கிறார். அவர் கடைசியாக 2016ல் வெளியான ‘நாயகி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இது தமிழிலும் வெளியாகி இருந்தது.