சென்னை: ‘ரங்கோலி’ சாய் பிரபாகரன், பாவெல் நவகீதன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி நடித்துள்ள படம், ‘மரியா’. எஸ்.ஹரி உத்ரா புரொடக்ஷன்ஸ் வழங்க, டார்க் ஆர்ட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹரி கே.சுதன் எழுதி இயக்கி தயாரித்துள்ளார். ஜி.மணிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரவிந்த் கோபாலகிருஷ்ணன், பரத் சுதர்சன் இசை அமைத்துள்ளனர். கோமதி காசிநாதன், பிரியதர்ஷினி, பிரத்யுமன் இணை தயாரிப்பு செய்துள்ளனர். படம் குறித்து ஹரி கே.சுதன் கூறியதாவது:
கதைப்படி ஒரு பெண்ணுக்கு திடீரென்று வேறொரு விஷயத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. பணியின் காரணமாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த உணர்வு மனதை சிதைக்கிறது. இதையடுத்து அப்பெண்ணை சமூகம் தூற்றுகிறது. அவரது எண்ணத்தை புரிந்துகொள்ள மறுக்கிறது. அப்பெண்ணுக்கான தனிப்பட்ட உணர்வுகளை உறவினர்கள் மட்டுமின்றி, பெற்ற தாயும் ஏற்க மறுக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் கதையிது. வரும் ஆகஸ்ட்டில் படம் திரைக்கு வருகிறது. முன்னதாக மத்திய பிரதேசம், புதுடெல்லி, கேரளா, மலேசியா, லண்டன், இத்தாலி ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் கிடைத்தது.