Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘தெறி’ படத்தின் ரீமேக் மூலம், பாலிவுட்டில் அறிமுகமாகிறார் கீர்த்தி சுரேஷ்

சென்னை: கடந்த 2016ல் அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மீனா மகள் நைனிகா நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘தெறி’. தற்போது இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

அட்லியுடன் இணைந்து பாலிவுட் தயாரிப்பாளர் முராத் கெதானி தயாரிக்கிறார். விஜய் கேரக்டரில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க, காளீஸ் இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பகமான தகவல் கூறுகிறது. தமிழில் சமந்தா நடித்த வேடத்தை கீர்த்தி ஏற்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனமும், சினி 1 ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழில் வெளியான ‘கீ’ என்ற படத்தை இயக்கிய காளீஸ் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

‘தெறி’ படத்தில் 2 ஹீரோயின்கள் நடித்திருந்ததால், இந்தி ரீமேக்கிலும் 2 கதாநாயகிகள் நடிப்பார்கள் என்றும், அவர்கள் ஜான்வி கபூர், கீர்த்தி சுரேஷ் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜய் தேவ்கன் நடிக்கும் ‘மைதான்’ என்ற இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த கீர்த்தி சுரேஷ், அவரது கால்ஷீட் பிரச்னை காரணமாக அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தனது நண்பர் அட்லி மூலமாக பாலிவுட்டில் நுழைய ஆவலுடன் காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தெலுங்கில் சிரஞ்சீவி தங்கையாக ‘போலா சங்கர்’, தமிழில் ‘கண்ணிவெடி’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘ரகு தாத்தா’, ‘சைரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.