Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பலாத்கார புகாரில் சிக்கிய நடன இயக்குனர் ஜானி கைது

ஐதராபாத்: இளம்பெண் பலாத்கார புகாரில் சிக்கிய சினிமா நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர் ஜானி. இவரது குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பலாத்காரம் செய்தார் என புகார் கூறினார். இந்த புகாரின் பேரில் ஜானி மாஸ்டர் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தெலுங்கு பிலிம் சேம்பரும் குழு ஒன்றை அமைத்து இது தொடர்பாக விசாரணையை துவக்கியது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோல் ஜானி மாஸ்டர் மீது புகார் கூறப்பட்டது. அவர் கைதும் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் புகார் எழுந்துள்ளது. புகார் கூறிய அந்த பெண், 2019ம் ஆண்டிலேயே ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. மைனர் பெண்ணை எப்படி பணியில் அமர்த்தப்பட்டார் என்ற ரீதியிலும் விசாரணை நடப்பதாக பிலிம்சேம்பர் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் தெலுங்கு படங்களில் பணியாற்ற ஜானி மாஸ்டருக்கு தெலுங்கு நடன இயக்குனர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோவாவில் பதுங்கியிருந்த ஜானி மாஸ்டரை நேற்று காலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.