சென்னை: தமிழில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்தவர், திகங்கனா சூர்யவன்ஷி. இந்தி உள்பட பல மொழிகளில் நடிக்கும் அவர், டி.வி தொடர்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகை ஜீனத் அமனுடன் இணைந்து அவர் நடித்த வெப்தொடர், ‘ஷோ ஸ்டாப்பர்’. இதை மணீஷ் ஹரிசங்கர் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த வெப்தொடரை வழங்குவதற்கு பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமாரிடம் தானே முன்னின்று பேசுவதாகவும், இதற்காக தனக்கு 75 லட்ச ரூபாயும், அக்ஷய் குமார் பெயரில் 6 கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று திகங்கனா சூர்யவன்ஷி கேட்டதாகவும், தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் மணீஷ் ஹரிசங்கர் போலீசில் புகார் கூறியிருந்தார்.
இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி இருந்தது. இந்நிலையில், மணீஷ் ஹரிசங்கர் மீது திகங்கனா சூர்யவன்ஷி அவதூறு வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். மேலும் மணீஷ் ஹரிசங்கர் மீது ஐபிசி 420, 406 உள்பட 11 பிரிவுகளின் கீழ் போலீசிலும் புகார் அளித்து இருக்கிறார். இதுகுறித்து திகங்கனா சூர்யவன்ஷி கூறுகையில், ‘என்னைப் பற்றி மணீஷ் ஹரிசங்கர் சொன்ன எல்லா விஷயங்களும் பொய். இந்த வெப்தொடர் உருவாகி 2 வருடங்களாகியும் கூட அதை விற்க முடியவில்லை என்பதால், விளம்பரத்துக்காக இப்படி செய்துள்ளார். எனவே, மேலும் இதுபற்றி விளக்கம் சொல்லி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்றார்.