சென்னை: ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கொல்லப்பட்ட 20 தமிழர்கள் சந்தித்த பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், ‘ரெட் சாண்டல் வுட்’. ஜே.என் சினிமாஸ் சார்பில் ஜே.பார்த்தசாரதி தயாரித்து இருக்கிறார். வரும் செப்டம்பர் 8ம் தேதி திரைக்கு வரும் இதில் வெற்றி, தியா மயூரிக்கா, எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், கேஜிஎஃப் ராம், மாரிமுத்து, ‘கபாலி’ விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், ஜே.பார்த்தசாரதி நடித்துள்ளனர். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். யுகபாரதி பாடல் கள் எழுதுகிறார். குரு ராமானுஜம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
படம் குறித்து அவர் கூறியதாவது: கடந்த 2015ல் தமிழ்நாட்டிலுள்ள ஜவ்வாது மலை, படவேடு ஆகிய மலைப்பிரதேசங்களில் இருந்து ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டச் சென்றதாக சொல்லி, திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் ரேனிகுண்டா, தலக்கோணம், தேன்கனிக்கோட்டை பகுதிகளிலுள்ள அடர்ந்த காடுகளில் நடந்துள்ளது. இந்தப் படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்ரீசுப்புலக்ஷ்மி மூவிஸ் சார்பில் கே.ரவி வெளியிடுகிறார். அல்லு அர்ஜூன் நடித்த ‘புஷ்பா’ படத்துக்கும், ‘ரெட் சாண்டல் வுட்’ படத்துக்கும் கதை மற்றும் காட்சி ரீதியாக எந்தவிதமான தொடர்பும் இல்லை. வெற்றிமாறன் இயக்கி இருந்த ‘விசாரணை’ போன்ற படம் இது. ஒலிப்பதிவை ரசூல் பூக்குட்டி செய்துள்ளார். அவர் வந்த பிறகு படம் வேறு தளத்துக்கு சென்றது.