விமர் சனம்
அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ராகினி திவேதி, மனோபாலா நடத்தும் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். தான் குடியிருக்கும் அபார்ட்மெண்டில் வசிக்கும் அசோக் குமாரை காதல் திருமணம் செய்கிறார். வாழ்க்கை சந்தோஷமாக செல்லும் நேரத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. செல்போன் கேமில் அதிக ஆர்வம் காட்டும் ராகினி திவேதி, மிகவும் கடினமான ஒரு கேமுக்குள் சிக்குகிறார். அதை நடத்துபவர்கள், ‘ஒரு அமைச்சரின் ரகசியம் அடங்கிய ஹார்ட்டிஸ்க்கை திருடி வர வேண்டும். இல்லை என்றால், உன் கணவரை கொல்வோம்’ என்று மிரட்டல் விடுக்கின்றனர். வேறுவழியின்றி அதை திருடும் முயற்சியில் ராகினி திவேதி ஈடுபடுகிறார். கடைசியில் அவர் அதை செய்து முடித்தாரா? அந்த கேமில் இருந்து வெளியே வந்தாரா? அதை நடத்துவது யார்? அவரை ஏன் டார்க்கெட் செய்தனர் என்பது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லியிருக்கிறது படம். ராகினி திவேதியை மையப்
படுத்திய கதை என்பதால், அவரும் தன் நடிப்பு மூலம் அந்த கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார். சண்டைக் காட்சிகளில் அதிகமான ரிஸ்க் எடுத்திருக்கிறார். அசோக் குமார் கதையின் நாயகன். இது நாயகி சம்பந்தப்பட்ட கதை என்பதால், அவருக்கான காட்சிகள் குறைவு. எனினும், முழு படத்தையும் சுமந்து திருப்பம் ஏற்படுத்துவதே அவரது கேரக்டர்தான்.
மனோபாலா சிரிக்க வைத்துள்ளார். ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர். எம்.செல்வம் ஒளிப்பதிவும், ஜூபின் பின்னணி இசையும் படத்துக்கு உதவியுள்ளன. கவாஸ்கர் அவினாஷின் பாடல்கள் ஈர்க்கவில்லை. ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்துகளை சொல்ல முயற்சித்த இயக்குனர் எஸ்.ஆர்.ராஜன், டெக்னிக்கல் டீட்டெய்லுடன் அதை சொல்ல தவறிவிட்டார். சராசரி பெண் ராகினி திவேதி, வில்லன்களை புரட்டி எடுக்கும் அளவுக்கு எப்படி மாறினார் என்பதற்கான காட்சி இல்லை. நாயகன் இடையில் காணாமல் போவது திரைக்கதையிலுள்ள பலவீனம். நல்ல கருத்தை சொல்ல வந்தவர்கள், அதை இன்னும் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கலாம்.