தனக்கென்று யாருமின்றி, ஜாலியாக தனிமையில் வசிக்கும் திரிகுன் ஓட்டி வந்த பைக்கை, பூர்ணா ஓட்டிக்கொண்டு வந்த கார் இடித்து கீழே தள்ளிவிடுகிறது. இதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டு தவிக்கும் திரிகுனை, மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்து மன்னிப்பு கேட்கும் பூர்ணா, அடுத்த நாளிலேயே அவரது நெருங்கிய தோழியாகிறார். பிறகு அவர்களின் நட்பு அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது. அப்போது பூர்ணா ‘தன்னிலை’ உணர்ந்து, அவரிடம் இருந்து விலகி தன் வீட்டுக்கு வருகிறார். அங்கு அவரது கணவர் விதார்த் அதிர்ச்சியில் நிலைகுலைந்து அமர்ந்து இருக்கிறார். அவருக்கு என்ன நடந்தது? பூர்ணாவுக்கும், அவருக்குமான திருமண பந்தம் என்ன ஆனது? திரிகுன், பூர்ணாவின் நட்பை அறிந்த விதார்த் என்ன முடிவு எடுக்கிறார்? அவருக்கும், சுபஸ்ரீ ராயகுருவுக்குமான ரகசிய உறவு நீடிக்கிறதா என்பது போன்ற பல கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது. சஸ்பென்ஸ் திரில்லர் கதை கொண்ட முற்பகுதியை திரிகுன், பூர்ணா நட்பை வைத்து நகர்த்திச் செல்லும் இயக்குனர் ‘சவரக்கத்தி’ ஜி.ஆர்.ஆதித்யா, பிற்பகுதியை விதார்த்தின் ரகசிய தொடர்பு, பூர்ணாவின் எல்லை மீறும் நட்பு, திரிகுன் விஷயத்தால் விதார்த் எடுக்கும் முடிவு ஆகியவற்றை வைத்து, சற்று குழப்பத்துடன் கூடிய கிளைமாக்சாக முடித்து வைக்கிறார்.
முழு படத்தையும் ஹேமா என்ற கேரக்டரை நம்பி உருவாக்கியதாலோ என்னவோ, பூர்ணா இதில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி, சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். இது அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படம். காதலனா, கணவனா என்று முடிவெடுக்க முடியாமல் திணறும் காட்சிகளில், கேரக்டரை உள்வாங்கி கச்சிதமாக நடித்துள்ளார். பொங்கி வழியும் காதல், அடைந்துவிட வேண்டும் என்ற வில்லத்தனம் கலந்த கேரக்டரில் திரிகுன் நடித்துள்ளார். இயக்குனர் சொன்னதை மட்டுமே செய்துள்ளார். பூர்ணாவுக்கு கணவன், தன்னிடம் பணிபுரியும் சுபஸ்ரீ ராயகுருவுக்கு காதலன் என்று, இருவிதமான கேரக்டர்களுக்கு வலு சேர்த்துள்ளார் விதார்த். தன் கள்ளக்காதலை அறிந்து வெறுக்கும் பூர்ணாவின் கால்களில் விழுந்து கதறும்போது உருக வைக்கிறார். மிஷ்கின் கேரக்டர் மர்மத்தை விடுவிக்கிறது. ரமா வழக்கமான அம்மாவாக வந்து கதறியிருக்கிறார்.
விதார்த்தின் அக்காவாக ரம்யா நடித்துள்ளார். இரவு நேரம் மற்றும் சண்டைக் காட்சிகளில் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. சில ஷாட்டுகளில் ‘மிஷ்கின் ஸ்டைல்’ தெரிகிறது. ஸ்கிரிப்ட் ரைட்டர், இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடலாசியர், பாடகர் என்றிருந்த மிஷ்கின், இப்படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பின்னணி இசையில் ‘இளையராஜாவின் தாக்கம்’ தெரிகிறது. வசனங்கள் இல்லாத இடங்களை வயலின்களால் மீட்டியிருக்கிறார். பாடல்களில் அவருடைய பாணி தெரிகிறது. மனிதர்களுக்குள் மறைந்துள்ள சாத்தானைப் பற்றி சொல்லும் படத்தை இன்னும் எளிமையாகவும், அழுத்தமாகவும் கையாண்டிருக்கலாம்.