சென்னை: ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.யு.அருண் குமார் இயக்கியுள்ள படம், ‘சித்தா’. இதில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், பாலாஜி, சிறுமிகள் சஹஸ்ராஸ்ரீ, எஸ்.ஆபியா தஸ்னீம் நடித்துள்ளனர். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு திபு நைனன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் முகப்பு பாடலை பாட, விஷால் சந்திரசேகர் பின்னணி இசை அமைத்துள்ளார். நாளை திரைக்கு வரும் இப்படம் குறித்து நிருபர்களிடம் சித்தார்த் நெகிழ்ச்சியுடன் பேசியதாவது: நான் சினிமாவுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், ‘சித்தா’ படம்தான் நடிப்பில் என் முதல் படம் என்று சொல்வேன். நடிகராக இருந்து தயாரிப்பாளராக மாறியபோது, எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல், உண்மையை மட்டுமே படமாக்க முடிவு செய்தேன். இதை ஏன் என் அறிமுகப் படம் என்று சொல்கிறேன் என்றால், மக்களின் நிஜ வாழ்க்கையை அப்படியே திரையில் பிரதிபலித்துள்ளோம். நான், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் ஆகியோரை தவிர அனைவரும் புதுமுகங்கள். 2 சிறுமிகளின் நடிப்பை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது, அவர்களிடம் இருந்து நடிக்க கற்றுக்கொள்கிறேன். இப்படம் மூலம் தமிழுக்கு வந்துள்ள மலையாள நடிகை நிமிஷா சஜயனுக்கு வாழ்த்துகள். பழநியில் லைவ் லொகேஷனில் படப்பிடிப்பு நடந்தது. இப்படம் ஒரு எமோஷனல் திரில்லர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
106