சென்னை: தோல்வியடைந்த திருமணம், உடல் நல பாதிப்பு மற்றும் வேலையில் கவனம் செலுத்த முடியாமை ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து என்னை பாதித்தபோது நான் அதிலிருந்து மீண்டு வந்தேன் என்று சமந்தா கூறியுள்ளார். இதுகுறித்து சமந்தா கூறியது: திருமண தோல்வி, உடல்நலக்குறைவு மற்றும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருந்த நிலை என என்னை மூன்றும் ஒன்று சேர்ந்து தாக்கியது. இதனால் நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக சோர்வாக இருந்தேன். ஆனால் அதே நேரத்தில் உடல் நலத்தால் பாதிக்கப்பட்டு சோர்வாக இருந்த நட்சத்திரங்கள் பற்றி நான் படித்து தெரிந்து கொண்டேன்.
அவர்களால் இந்த கஷ்டங்களில் இருந்து மீண்டு வர முடிந்தது போல் என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எழுந்தது. இந்த நாட்டில் நான் ஒரு நேசிக்கப்படும் நட்சத்திரமாக இருக்கும்போது நானும் அவர்களுக்கு (ரசிகர்களுக்கு) உண்மையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் என்னுடைய தோல்விகள் பகிரங்கப்படுத்துவதை பெரிதுபடுத்துவதில்லை. ஒரு ஸ்டார் என்பவர் எத்தனை சூப்பர் ஹிட் மற்றும் பிளாக் பாஸ்டர் படங்களை கொடுத்தார் என்பதும், எத்தனை விருதுகளை வென்றார் என்பதும் கணக்கில்லை. வலியையும் கஷ்டங்களையும் தாண்டி மீண்டு வந்தாரா என்பதுதான் முக்கியம்.