சென்னை: தமிழில் படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், மலையாளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றிபெற்று, கோடிக்கணக்கில் வசூலித்த ‘2018’ என்ற படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை தயாரிக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கடந்த 2018ல் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நிகழ்ந்த பேரிடரை மறக்க முடியாது. அந்த நெருக்கடியான தருணத்தில் மக்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக, ஆதரவாக நின்று கேரள அரசாங்கத்துக்கு உதவி செய்தனர். அதை ‘2018’ என்ற டைட்டிலில் மிகவும் நேர்த்தியான படைப்பாக உருவாக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப், மனிதநேயமே சிறந்தது என்பதை யதார்த்தமாக சொல்லியிருந்தார்.
மலையாளத்தில் அதிகமாக வசூலித்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் கூட்டணி அமைத்துள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.