சென்னை: சிறந்த திரில்லர் படம் என்ற பாராட்டுகளுடன் வெற்றிபெற்றுள்ள ‘ஒரு நொடி’ படக்குழுவினர், மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருக்கின்றனர். முழுநீள திகில் கதை கொண்ட இப்படத்தை அமோகம் பிக்சர்ஸ் சார்பில் கே.சுபாஷிணி, ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே.ஜி.ரத்தீஷ் இணைந்து தயாரிக்கின்றனர். டைட்டில் முடிவாகவில்லை. தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ஜி.தனஞ்செயனின் கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. ‘ஒரு நொடி’ படத்தை இயக்கியிருந்த பி.மணிவர்மன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
இதில் தமன் குமார், மால்வி மல்ஹோத்ரா, மைத்ரேயா, ரக்ஷா செரீன், அருண் கார்த்தி, காளி வெங்கட், வேல.ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தான பாரதி, முனீஷ்காந்த், யாசர், சிவம், நக்கலைட்ஸ் நிவேதிதா, பேபி சஃபா நடிக்கின்றனர். கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்ய, சஞ்சய் மாணிக் கம் இசை அமைக்கிறார். பாடல்களை சினேகன் எழுதுகிறார். சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வருகிறது.