சென்னை: பேமிலி டிராமா திரில்லராக உருவாகியுள்ள படம் ‘குற்றச்சாட்டு’. இப்படம் மூலம் இயக்குநராக விமல் விஷ்ணு அறிமுகமாகிறார். மலையாளத் திரைப்படத் துறையிலும் ஊடக விளம்பரத் துறையிலும் 16 வருடங்கள் பணிபுரிந்தவர். ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். காமெடி வேடங்களில் நடிக்கும் நடிகர் கருணாகரன் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பரத், தினேஷ் பிரபாகர், முன்னா சைமன், ரியாஸ் கான், ஷிவானி (குழந்தை நட்சத்திரம்) மற்றும் பல முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். பிரானா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் விமல் விஷ்ணு கூறும்போது, ‘கொச்சியில் பல தமிழர்கள் வசித்து வருகின்றனர். அப்படி கொச்சியில் குடியேறிய அப்பா, அம்மா மற்றும் அவர்களின் அன்பு மகள் இவர்களை சுற்றி நடக்கும் கதைதான் ‘குற்றச்சாட்டு’. அவர்களின் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டு, குற்றவாளி நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும்போது, அப்பாவி தந்தை தனது மகளுக்கு நீதி கேட்க முயற்சி செய்கிறார். படம் ஆறு வெவ்வேறு அடுக்குகளுடன் நான் லீனியர் முறையில் எழுதப்பட்டுள்ளது. படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன’ என்றார். சுரேஷ் நந்தன் இசையமைக்க, நிதின் சேகர் ஆர்.கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பார்த்திபன், எடிட்டிங். டிவைன் பிளாக்பஸ்டர் சார்பில் ராஜேஷ் மாதவன், சஜனி ராஜேஷ், தயன் ஷங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.