கடந்த சில நாட்களுக்கு முன் கேதார்நாத் கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கோயிலின் முன்பாக காதல் ஜோடி ஒன்று தங்களது திருமண அறிவிப்பை வெளிப்படுத்திக்கொள்ளும், சினிமா பாணியிலான ‘லவ் புரபோஸ்’ காட்சி ரீல்ஸ் வீடியோவாக பரவியது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். பூங்கா, மால் என்ற வரிசையில் பொழுதுபோக்கு இடங்களாக ஆன்மிக தலத்தை பாவிப்போருக்கு எதிராக கண்டனங்களும் பதிவாயின. குறிப்பாக யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் தங்கள் சுய விளம்பரத்துக்காகவும், வருமானத்துக்காகவும் இம்மாதிரியான நடவடிக்கைகளில் இறங்குவதாகவும், அவ்வாறானவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அதையடுத்து பத்ரி-கேதார்நாத் கோயில் கமிட்டி நிர்வாகத்தின் சார்பில், காவல்துறை புகார் அளிக்கப்பட்டது.
மேலும், ஆன்மிக தலத்தின் புனிதத்துக்கும், அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்று, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இதையடுத்து, கோயில் வளாகத்தில் ‘ரீல்ஸ்’ உள்ளிட்ட வீடியோ பதிவுகளை எடுப்பதற்கு தடை விதித்து கோயில் நிர்வாகம் மற்றும் காவல் துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் நடிகை ரவீனா டாண்டன், கேதார்நாத் கோயில் வளாகத்தில் ‘லவ் புரபோஸ்’ வீடியோ எடுத்த ஜோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘நாம் வணங்கும் கடவுள்கள், அன்பிற்கு எதிராக எப்ேபாது மாறினார்கள்? மேற்கத்திய கலாசாரம் என்பதால் அவர்களை திட்டுகின்றீர்களா? (நெட்டிசன்கள்). மிகவும் வருத்தமாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.