சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்த இயக்குனர் வீரபாண்டியன் பேசிய விஷயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. வீர பாண்டியன் பேசும்போது, ‘ஐஸ்வர்யா ராஜேஷை திரை உலகிற்கு நான்தான் அழைத்து வந்தேன். எனது படத்தில் அவர் அறிமுகமானார். ஆனால், இந்த விஷயத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த பேட்டிகளிலும் கூறவில்லை.. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வளர்ந்த நட்சத்திரமாக ஆன பிறகு முதல் படத்தை இயக்கிய தன்னுடன் பணியாற்ற விரும்பவில்லை.
இது மட்டுமல்ல, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க வந்தபோது ஆட்டோவுக்கு கூட அவரிடம் பணமில்லை. நான்தான் பணம் கொடுத்தேன். அவரிடம் நன்றியே இல்லை’ என்றார். இயக்குனர் வீரபாண்டியன் பேசிய இந்த விஷயம் கேட்டு, சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யாவை பலரும் விமர்சனங்கள் செய்தனர். இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த விளக்கமும் கூறாத நிலையில், திடீரென தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘நிறைய பேர் ஒரு பக்க கதையை மட்டுமே கேட்டுவிட்டு பேசுகிறார்கள். விஷயம் நடந்த இடத்தில் இல்லாத விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் ஒருவரை பற்றி நிர்ணயிப்பது வாழ்க்கையையும் உறவையும் கெடுத்துவிடும். அதனால் மொத்த கதையையும் தெரிந்து கொண்ட பின்பு ஒருவரை நோக்கி குற்றச்சாட்டுகளையும் ஒருவரை நோக்கி தாக்குதல்களையும் செய்ய வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் வீரபாண்டியனுக்கு ஐஸ்வர்யா பதிலடி கொடுத்திருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.