மும்பை: தமிழில் ஷங்கர் இயக்கிய ‘2.0’ படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்தவர், பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார். கடந்த 2000ல் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற அவர், பிறகு இந்தியாவின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் பல படங்களில் நடித்தாலும், இந்திய குடியுரிமை இல்லாதவர் என்று சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார். அவரை ‘அக்ஷய் குமார்’ என்று சொன்னதை விட, ‘கனடியன் குமார்’ என்று பலர் கிண்டல் செய்தார்கள். தற்போது அக்ஷய் குமார் இந்திய குடியுரிமை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றிஅவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இதயமும், குடியுரிமையும் இந்தியன். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்’ என்று குறிப்பிட்டு, இந்திய குடியுரிமை பெற்றதற்கான சான்றிதழை பதிவிட்டுள்ளார். அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான ‘ஓஎம்ஜி 2’ படம் வெற்றிகரமாக ஓடுவதாக பாலிவுட் டில் கூறப்படுகிறது.