மும்பை: பாலிவுட் இளம் முன்னணி நடிகை அலியா பட், இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதல் திருமணம் செய்த பிறகு ஒரு மகளுக்கு அம்மா ஆனார். பாலிவுட், ஹாலிவுட் என்று பிசியாக நடித்து வரும் அவர், தென்னிந்திய மொழிகளில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்திருந்த அலியா பட், நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கவும் காத்திருக்கிறார். ஆனால், அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க யாரும் முன்வராத நிலையில், அவரது எதிர்பார்ப்பு இன்னும் நிறைவேறவில்லை.
தற்போது மும்பையில் தனது கணவர் மற்றும் மகளுடன் தனியாக வசிக்க மிகப் பிரமாண்டமான பங்களா கட்டிக் கொண்டிருக்கும் அவர், சமீபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார் வாங்கியுள்ளார். நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் அலியா பட், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 80 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறார். அதாவது, அவரை 8 கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இது வேறெந்த நடிகையும் செய்யாத சாதனையாகும். இதனால் அவர், இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களைப் பதிவிட அதிக தொகை வாங்குகிறார்.