சென்னை: திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய அவதூறு சொற்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நடிகையும், பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் உரிமை ஆணைய உறுப்பினருமான குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். தனக்கு எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், திரிஷாவிடம் உடனடியாக மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார். அதற்கு திரிஷா, ‘தவறிழைப்பது மனித குணம்; மன்னிப்பது தெய்வீக குணம்’ என்று சொல்லி மன்சூர் அலிகானை மன்னித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகிய மூவர் மீதும் வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்தார். தான் பேசியதை ஒரு வாரத்துக்கு பின்பு ‘எடிட்’ செய்து திட்டமிட்டு பரப்பியுள்ளதாக மன்சூர் அலிகான்
குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி மீதும், மேலும் சர்ச்சைக்குரிய வகையில் அந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீதும் வழக்கு தொடர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மான நஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை இன்று தொடருவதாகவும், சில ஆதாரங்களுடன் வழக்கு தொடுப்பதாகவும் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.