மும்பை: சென்சார்போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் நடிகர் விஷாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்த படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தின் டப்பிங் பதிப்பு மும்பையிலுள்ள சென்சார் போர்டுக்கு சான்றிதழ் பெறுவதற்காக திரையிடப்பட்டது. அப்போது படத்துக்கு சான்றிதழ் வழங்க ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் வேறு வழியில்லாமல் அதை சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு கொடுத்ததாகவும் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து விசாரிக்க ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் உத்தரவிட்டார்.
அதன்படி சிபிஐ வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில் ஒரு பெண் அதிகாரி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க விஷால் அழைக்கப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை அவர் மும்பையிலுள்ள சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அவரிடம் எவ்வளவு லஞ்ச பணம் தரப்பட்டது, யார் அதை பெற்றனர், எதற்காக பணம் வாங்கினார்கள் என பல்வேறு கேள்விகள் சிபிஐ தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கெல்லாம் விஷால் பதிலளித்தார். அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணனிடமும் விசாரணை நடந்தது.