ரஜினிகாந்த்தின் 170வது படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பணக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார் லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் நடிக்கும் நடிகர். நடிகைகளின் பெயர்களை அறிவித்து வந்தனர். துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடிப்பதாக தெரிவித்தனர். தமிழ் கலைஞர்களுடன் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பன்மொழி கலைஞர்களும் நடிக்கின்றனர்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை, பணக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த், கன்னியாகுமரியில் இருந்து காரின் மூலம் பணக்குடிக்கு வந்தார். இவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பணக்குடியில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.