மும்பை: மிருணாள் தாக்கூர், இஷான் கட்டர் நடித்துள்ள இந்தி படம் ‘பிப்பா’. 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது நடந்த உண்மைச் சம்பவங்களைக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். கடந்த நவம்பர் 10ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் இப்படம் வெளியானது. இதில் பிரபல வங்கமொழி கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் ‘கரார் ஓய் லூஹோ கோபட்’ என்று தொடங்கும் வங்கமொழி பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார் ரஹ்மான். இதற்கு நஸ்ருல் இஸ்லாம் குடும்பத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். முழு ராகத்தையே மாற்றி இந்த பாடலை உருவாக்கி இருப்பது, இந்த பாடலின் அசல்தன்மையை பாழ்படுத்தியதாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் இருந்து நஸ்ருலின் பேத்தி அனிந்திதா காஸி கூறும்போது, ‘பாடலை இப்படி மாற்றி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக படத்தில் இருந்தும் பொதுத் தளத்தில் இருந்தும் இப்பாடலை நீக்க வேண்டும்’ என்றார். இந்நிலையில், ‘பிப்பா’ படத்தை தயாரித்துள்ள ராய் கபூர் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முறையான அனுமதி பெற்றே அந்தப் பாடலை பயன்படுத்தி இருக்கிறோம். வங்கதேச விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சுதந்திரம், அமைதி மற்றும் நீதிக்கான அவர்கள் போராட்டத்தின் உணர்வுகளை மனதில் கொண்டும் அந்தப் பாடல் சேர்க்கப்பட்டது. பாடலை மாற்றியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது. அதே சமயம், பாடலை நீக்க முடியாது என படக்குழு பிடிவாதமாக உள்ளதாம். இதையடுத்து சட்டப்படி இந்த பிரச்னையை கையாள கவிஞரின் குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.