மைசூர்: மைசூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட ‘பாகுபலி’ நாயகனின் மெழுகு சிலையால் சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில், அந்தப் படத்தின் சினிமா தயாரிப்பாளர் கடுங்கோபத்தில் உள்ளார். கர்நாடகா மாநிலம் மைசூரில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில், ‘பாகுபலி’ படத்தில் நடித்த நடிகர் பிரபாஸின் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த மெழுகு சிலையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகுபலி படத்தில் வந்த பிரபாஸின் கம்பீர உருவ தோற்றமும், ெமழுகு சிலையின் உருவ தோற்றமும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
இந்த சிலையை அருங்காட்சியகத்தில் நிறுவுவதற்கு முன், சம்பந்தப்பட்ட பாகுபலி திரைப்பட தயாரிப்பாளர்களிடம், அருங்காட்சியக நிர்வாகம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. அனுமதியின்றி அருங்காட்சியகத்தில் சிலையை நிறுவியதால் கடும் கோபம் கொண்டுள்ள பாகுபலி தயாரிப்பாளர்கள், தற்போது அருங்காட்சியக நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றனர். மேலும், அந்த சிலையை அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பாகுபலி படத்தின் தயாரிபாளர் ஷோபு யர்லகட்டா வெளியிட்ட பதிவில், ‘அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மெழுகு சிலையானது, எங்களது அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.