நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எம்.எஸ்.பாஸ்கருக்கு மனைவி இல்லை. வெண்பா, பிரியதர்ஷினி ஆகிய 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் வெண்பாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. ஏற்கனவே நிச்சயம் செய்த மாப்பிள்ளை ‘கபாலி’ விஷ்வந்தையே திருமணம் செய்வேன் என்ற விஷயத்தில் வெண்பா உறுதியாக இருக்கிறார். ஜெயிலுக்குப் போய்விட்டு வந்த ‘கபாலி’ விஷ்வந்த் வேண்டாம் என்ற விஷயத்தில் எம்.எஸ்.பாஸ்கர் பிடிவாதமாக இருக்கிறார்.
அடுத்த மகள் பிரியதர்ஷினி, மருத்துவம் படிப்பதற்காக ‘நீட்’ நுழைவுத்தேர்வுக்கு தயாராகிறார். அதற்காக அரசியல்வாதி நமோ நாராயணன் நடத்தும் தனியார் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்கிறார். மருத்துவப் படிப்புக்கான சீட்டுக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கோச்சிங் சென்டரில் கேட்பதாக அக்கா வெண்பாவிடம் பிரியதர்ஷினி சொல்கிறார். ஆனால், சொன்ன அன்றே திடீரென்று பிரியதர்ஷினி காணாமல் போகிறார்.
இதையடுத்து எம்.எஸ்.பாஸ்கரும், வெண்பாவும் பிரியதர்ஷினியைக் கண்டுபிடித்து கொடுக்கச் சொல்லி போலீசில் புகார் செய்கின்றனர். தீவிர புலன் விசாரணை நடக்கும்போது, பிரியதர்ஷினி படுகொலை செய்யப்பட்ட விஷயம் தெரிகிறது. பிறகு எம்.எஸ்.பாஸ்கர் என்ன முடிவெடுத்தார் என்பது மீதி கதை. முழுநீள சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படத்தை, கதையின் நாயகன் எம்.எஸ்.பாஸ்கர் தன் தோள்மீது சுமந்துள்ளார். வெண்பாவும், பிரியதர்ஷினியும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
‘கபாலி’ விஷ்வந்த், ஆகாஷ் பிரேம் குமார், நமோ நாராயணன். கார்த்திக் சந்திரசேகர் உள்பட அனைவரும் கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். இறுதியில் ‘கபாலி’ விஷ்வந்த் யார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவும், எஸ்.ஆர்.ஹரியின் இசையும் கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கின்றன. வழக்கமான பழிவாங்கும் கதையில், கிளைமாக்சில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து தனது படைப்பைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார், இயக்குனர் அருண் கே.பிரசாத். சில காட்சிகளில் லாஜிக் மிஸ்சிங். வன்முறைக் காட்சிகளில் குபுகுபுவென்று ரத்தம் பீறிடுவதை தவிர்த்திருக்க வேண்டும்.