கதையின் நாயகன் சித்து தலைமையிலான 5 நண்பர்கள் சினிமாவிற்கு கதை எழுதுவதற்காக தனிமையில் இருக்கும் ஒரு காட்டு பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு ‘கதை சுருக்கம்’ என்ற பெயரில் ஒரு துண்டு சீட்டு கிடைக்கிறது. அதில் எழுதப்பட்டிருப்பது அப்படியே நடக்கிறது. அந்த துண்டு சீட்டில் வரும் கதை மாந்தர்களாக இவர்கள் மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், கொலை செய்வதுமாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் ஹரித்துவாரில் நடந்த சிவனடியார் சாயாஜி ஷிண்டே மற்றும் அகோரி ரவிகாளே ஆகியோரின் மோதல்.
இரண்டுக்கும் உள்ள தொடர்பு என்ன? நண்பர்கள் தப்பித்தார்களா? என்பது படத்தின் கதை. வழக்கமான பேய் கதையை கொஞ்சம் வித்தியாசமாக தர முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் டி.எஸ்.ராஜ்குமார். நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணன் பேயாகவும், கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். சித்து மற்றும் அவரது நண்பர்களுக்கு பயப்படுவதை தவிர வேறு வேலை இல்லை.
ஹரித்துவாரில் நடப்பதாக காட்டப்படும் சாயாஜி ஷிண்டே, ரவிகாளே மோதல் காட்சிக்கு நிறைய உழைத்திருக்கிறார்கள். மைம் கோபி, ரியாமிகா, மாதவி, சரத் ஆகியோர் தங்கள் பங்கை செய்திருக்கிறார்கள். வசந்தின் ஒளிப்பதிவு பயமுறுத்தி கதை சொல்கிறது. மலையாளத்தில் புகழ்பெற்ற ஃபோர் குழுவினர் பின்னணி இசையால் படத்தை விறுவிறுப்பாக்குகிறார்கள். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நல்லதொரு பேய் படமாக அமைந்திருக்கும்.