சென்னை: தமிழ் திரையுலகின் மாபெரும் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் டான்ஸ் டான் குரு ஸ்டெப்ஸ் கோலிவுட் விருது விழா சென்னையில் நடைபெற்றது. வயதில் மூத்த கலைஞர்கள் பலரின் சாதனைப்பயணம் வீடியோவாக இவ்விழாவில் ஒளிபரப்பப்பட்டது. இன்றைய தலைமுறை நடனக் கலைஞர்களே அறிந்திராத பல நடனக் கலைஞர்களின் சாதனைகளை மேடையில் தெரியப்படுத்தினர். தமிழ் திரையுலகில் 1938 முதல் 2023 வரை பணியாற்றிய அனைத்து நடனக் கலைஞர்களும் கவுரவிக்கப்பட்டனர். மேலும் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்களும் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய்சேதுபதி பேசும்போது, ‘உங்களின் சாதனைகள் அளப்பரியது. நடனம் என்றாலே எனக்குப் பயம். நான் வேலைபார்த்த அனைத்து மாஸ்டர்களுக்கும் அது தெரியும். சினிமாவில் கொடுக்கப்படும் குறைவான நேரத்தில் ஆச்சரியப்படும்படியாக கதைக்கு ஏற்றவாறு, போடப்பட்டிருக்கும் செட்டுக்கு ஏற்றவாறு, மக்களும் ரசிக்கும் வகையில், நடனத்தை அமைக்கும் உங்கள் திறமை போற்றப்பட வேண்டியது. பழைய காலப்பாடல்களை பார்க்கும் போது, அதில் வரும் நடனம் எல்லாம் எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கும், சில பாடல்கள் ஒரு நாளில் எடுத்ததாகச் சொல்வார்கள் அது மிகப்பெரிய ஆச்சரியம்’ என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தார். நடனக் கலைஞரான தர் மாஸ்டர், தன் மகள் அக்ஷதா தருடன் இணைந்து இந்நிகழ்சியை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்.